அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)... நமது ஊர் கோட்டூர் தோட்டம் வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்பது உங்கள் அன்பு நண்பன் நவாஸ்கான்!

>

Tuesday, April 24, 2012

கிராமத்து நினைவலைகள்....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எனது கிராமத்தின் அடையாளங்களையும் நிகழ்வுகளையும் பதிவாக்கி என் அடுத்த தலைமுறைக்கு கொடுத்திடவே இந்த வலைத்தளம்..... நஞ்சை நிலத்தின் நடுநடுவே வட்டமடிக்கும் கொக்குகளுடன் சேர்ந்து நானும் வயல் வரப்பு நடுவே களைப்பாறியவன் இன்று பொருளாதாரம் தேடி பாலைவன தேசத்து மனித பூச்சிகளுடன் புழுதியில் புரண்டு எரிபொருட்கள் உமிழ்ந்த காற்றை சுவாசித்து கனவுகளை சுமந்து பறந்து கொண்டிருக்கின்றேன்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, கோட்டூர் தோட்டம் எனும் அழகிய கிராமம் தான் எனது பிறப்பிடம். வடக்கே 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்னார்குடி நகராட்சியும்,தெற்க்கே 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சியும் தான் எங்களுக்கு முக்கிய நகரங்கள்! விவசாயம்தான் பிரதான தொழில், பிறகு கூலி வேலை. என்னைப்போல பொருளாதார இரையை தேடி பல அந்நிய நாடுகளுக்கு சென்று வரும் பறவைகளும் ஏராளம்!,மழைக்கால நாட்கள் கிராமத்தில் இன்னும் ரம்மியமானது, தொடர்மழையாக இருப்பின் பள்ளிகளும் விடுமுறையாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள பசங்களை ஓரிடத்தில் அமரவைப்பது அவ்வளவு எளிதல்ல! காகித கப்பல் கொண்டு போர்தொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்! இன்று அதை நினைத்து பார்த்தாலும் நெஞ்சுக்குள் தேன்சுரக்கும் காலங்கள்! சிறு வயதில் சுலைமான் குளத்தில் தூண்டில் மீன், பொம்ம வாய்க்காலில் குளியல்,அக்கரை தோட்டத்தில் திருட்டு மாங்காய், சாலையோர மரத்தில் புளியம்பிஞ்சு, கோட்டாகம் வயல்வரப்போர பனைமரத்து நுங்கு, மணல்மோட்டு காட்டில் சப்பாத்திபழம், கோட்டூர் அரன்மனைத்தோட்டத்து நாகப்பழம், கருவகாட்டில் கூட்டாஞ்ச்சோறு, இப்படி எதையும் விட்டுவைக்காமல் எல்லாத்தையும் ஒரு கை பார்த்துவிடுவது இன்னும் இதயத்தில் ஒட்டியிருக்கின்றன அந்த நிறைவான தருணங்களின் நிலைத்த வடுக்கள்! எல்லா பசங்களும் இணைந்து பொழுதுக்கும் விளையாண்டு பொழுது முடியும் போது வீட்டுக்கு சென்றால் கிடைக்கும் பாருங்க முதுகுல பரிசு அதெல்லாம் சுகமான காலம்தான்! இன்று காடு எல்லாம் வீடாச்சு, மணல்மேடும் போயாச்சு விளையாட ஒரு திடல் இல்லாம இப்போதெல்லாம் எங்க ஊர் பசங்க நகரம் மாதிரி தொலைக்காட்சிக்கு அடிமையாக கிடக்குதுங்க என்னத்த சொல்லுறது!.... மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்க ஆரம்பித்தாலே நெஞ்சில் ஊற்றெடுக்கும் இன்பத்திற்கு வார்த்தைகள் இல்லை இந்த பிரபஞ்சத்தில்!.... நினைவுகள் தொடரும்..........

No comments:

Post a Comment